Tuesday 14 July 2015

லண்டன் திரையில் “பாகுபலி”



திரையிடப்பட்ட மூன்றாம் நாளே டிக்கட் கிடைத்தது.. லண்டனில் தமிழ் படம் இப்படி ஹவுஸ்புல்லாக ஓடி நான் பார்த்ததே இல்லை.. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் இதே கதை தான் என கேள்விப்பட்டேன். UKல் 15 வயது செர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். போர் காட்சியின் விகாரம் காரணம் என எண்ணுகிறேன். அதனால் குழந்தைகளுடன் இருக்கும் பலர் சினிமாவிற்கு போகமுடியாமல் இருக்கிறார்கள். அப்படியிருந்தே இவ்வளவு சனக்கூட்டம்..



பாகுபலி.. பாகுபலி.. பாகுபலி.. மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்க ஆசையாக உள்ளது. ஏதோ ஒரு கவர்ச்சி அந்தப் பெயரில்..

வழமையான துரோகமும், பழிவாங்குதலும் தான் கதை. ஆனால் அதை சொல்ல வந்த விதம் தான் புதிது. காட்சி அமைப்புகளின் சாலத்தினால் பல இடங்களில் மயிர் கூச்செரிந்தது.. பல்வேல் தேவன் காட்டு எருமையை அடக்கும் காட்சியும் அந்த அருவியும் அருமையான கிராபிக்ஸ்..


ரம்யா கிருஷ்ணன்.. நிமிர்ந்த நடையும் நேரிய நல் பார்வையுடனும் வந்து கலக்குகிறார். குழந்தையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் கத்தியை சுழட்டும் லாவகமும்.. காலை மேலே தூக்கிப் போட்டுக்கொண்டு மழலைக்கு பாலூட்டும் அழகும்.. போர்க்களத்தில் சீரிப்பாயும் கோபமும் கொந்தளிப்பும் என நாம் காணாத ஒரு ராணியை கண் முன் நிறுத்தி மிரட்டுகிறார். இவரின் முன் படத்தின் கதாநாயகன் பிரபாசே சிறுத்துப் போய்விடுகிறார்.

தமன்னா புதிதாக வீரம் காட்டுகிறார். அப்படி இருந்தும் அந்தப் பாடலில் அவ்வளவு விரசம் தேவையா..?

பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, நாசர், ராணா என ஒவ்வொருவரும் அந்த அந்த கதாபாத்திரமாக கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். அனுஷ்காவின் பங்கு இரண்டாம் பாகத்திலேயே அதிகமாக இருக்கும் என நம்புகிறேன்.


போர் காட்சிகளைப் பார்க்க Lord of the Rings பார்த்த ஞாபகமே வந்தது. அந்த அளவிற்கு அருமை. அந்த காலக்கேய தலைவனாக வரும் பிரபாகரனை நேரில் கண்டால் பயமே வரும் அளவிற்கு கொடூரமான நடிப்பு. அதுவும் சப்புக்கொட்டி சப்புக்கொட்டி அவர் பேசும் அழகே தனி போங்கள்..

எடிட்டிங், இசை, சண்டை காட்சி அமைப்பு, உடை, கலையமைப்பு, வசனம் என எல்லோரும் போட்டி போட்டு வேலை செய்திருக்கிறார்கள். ஆரோக்கியமான போட்டி.. சிறப்பான பலன் தந்துள்ளது£25 மில்லியனுக்கு என்ன தான் செய்திருப்பார்கள் என்ற கேள்வியுடன் உள்ளே வருபவர்களுக்கு முழுத்திருப்தியுடன் வெளியே செல்வதற்கு வழி வகுத்திருக்கிறார்கள்.

இந்திய சினிமா பிரியர்கள் மார்தட்டி பெருமை கொள்ளக்கூடிய படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. காணத்தவறாதீர்கள்..


இரண்டாம் பாகத்தை இப்போதே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறேன்..

2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டம் ஈர்த்து விட்டது...

Unknown said... Best Blogger Tips

பாபநாசம் விமர்சனம் பதிவிடவில்லை. ஆனால் அதற்கு அடுத்து வந்த பாகுபலி விமர்சனம் எழுதிட்டிங்க.ஏன் கமல் படம் பார்க்கவில்லையா? இல்லை அங்கு படம் திரையிடவில்லையா?

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget